திங்கள், 8 ஆகஸ்ட், 2011

நான்கு சுவர் எல்லை.!!!


இவர்களை தெரியுமா?
நான் இவர்களை உங்களுக்கு அறிமுக படுத்தி வைக்கிறேன்!
நான், நீங்கள் ஏன் நாம் எல்லோருமே ஒன்று தான்
ஆம் நான்கு சுவர் எல்லைக்குள் சிக்குண்டவர்கள்
தன்னை சுற்றி தாமே எழுப்பிக்கொண்ட
நான்கு சுவர்களுக்குள் சிக்குண்ட மனிதர்கள்
நான்கு சுவர் ஆக்கிரமிப்புகளுக்குள்
அடைபட்ட பகுதி தான்
இவர்களின் உண்மையான உலகம்
அந்த சுவர்களுக்குள்
சிறைப்பட்டு கிடப்பது தான்
இவர்களின் வாழ்க்கை
ஜனனமும், மரணமும், ஊடலும், கூடலும்,
இருப்பும், வெறுப்பும், செழுமையும், வறுமையும்
எல்லாம்அந்த நான்கு சுவர்களுக்குள்ளாகவே
இடையில் சிறு சிறு பிரிதல்கள் என்றாலும்
வேறு இடத்திலும்
நான்கு சுவர்களுக்குள் தான்
அடைபட்டுகிடக்கிறார்கள்
அவரவர் தகுதிகளுக்கேற்ப
சுற்று சுவர்களை விரிவுப்படுத்தி கொள்கிறார்கள்
பெரிய மனிதர்கள்
தங்கள் சுவற்றுக்கு இடைப்பட்ட பகுதியை
பெரிதாக வைத்திருகிறார்கள்
சிறிய மனிதர்கள்
சிறிய இடத்தை சுற்றி சுவர் எழுப்புகிறார்கள்
மனிதன் உலகத்தில் தனக்கென்று இடம் தேடுவதே
தன்னை சுற்றி சுவர் எழுப்ப தான்
சுவற்றுக்கு மேலே கூரை
சுவரை காத்துக்கொள்ள
சுவற்றுக்கு வெளியே
சுவரோ வேலியோ எழுப்புகிறார்கள்
மேற்கூரையும் அப்படிதான்
மச்சியோ, குச்சியோ, ஓடோ
அவரவர் தகுதிக்கேற்ப
தங்களை நம்பாமல் சுவற்றை நம்பி வாழ்கிறார்கள்
தங்கள் சுவற்றுக்குள் அடுத்தவரை அனுமதிப்பதில்லை
தங்களோடு ஐக்கியப்பட்டவரை
தங்கள் சுவர்களுக்குள் அடைத்துக்கொல்கிறார்கள்
இவர்களின் உயரத்தையும் கூறையே தீர்மானிக்கிறது
இவர்களுக்கு வானம் என்பது
நிலவுக்கும், நட்சத்திரங்களுக்கும்,
மேகங்களுக்கும், சூரியனுக்கும் உரியது
எப்பொழுதாவது வானத்தை பற்றி
வார்த்தை கோர்வையாக ஒரு பாடல் வரும்
அதை கேட்டு ரசிக்க ஒரு கூட்டம் வரும்
இந்த சுவற்றுக்கு மத்தியில் சுற்றி கொண்டிருப்பவர்களுக்கு
சுவற்றை பிரிந்தவன் பிச்சைகாரன்
சுவற்றுக்குள்ளாகவே
சிதைந்து கொண்டிருப்பவன் நடைபிணம்
ஏன் சுவர்களே இல்லாத நடைபாதை வாசிக்கு மட்டும் என்ன
உலகம் விரிந்தா கிடக்கிறது
மதில் சுவருக்கும் சாலைக்கும்
இடைப்பட்ட பகுதி தான் அவனது உலகம்
சுவருகளை துறந்து
எல்லைகளை கடக்க வேண்டிய
துறவிகளே மடாதிபதிகளாக
சுவர் எழுப்பி கொண்டு வாழும்போது
ஏன் தெய்வத்தை கூட
கருவறைக்குள் கட்டிப்போட்டு விட்டோம்
இங்கே சுவர் இல்லாமல்
வெட்டவெளியில் தெய்வம் இருப்பது கூட
சுவர் எழுப்ப ஆள் இல்லாததால் தான்
சுவர்களுக்குள் பதுங்குகிறார்கள்
சுவர்களுக்குள் பதுக்குகிறார்கள்
ஒருவரது பதுக்கலை
இன்னொருவன் பறித்துக்கொண்டால்
வேறொரு சுவற்றுக்குள் காவல்துறை காத்திருக்கிறது
வேறொரு சுவற்றுக்குள் நீதி மன்றம் கூடுகிறது
பறித்தவனை வேறொரு சுவற்றுக்குள் சிறை வைக்கிறது
இந்த சுவர்களுக்குள் சிறு சிறு பேதங்கள் தான்
சில திறந்திருக்கும்
சில ஜன்னல்களோடு இருக்கும்
சில எப்பொழுதும் அடைபட்டு கிடக்கும்
சுவற்றுக்குள் வாழ்வதில் ஒன்றிரண்டு வெளி உலக தொடர்புகளுக்கான
திறப்புகளும் உண்டு
ஜன்னலும் வாசலுமாய் ஆனால்
அவைகளும் கதவுகளோடும் தால்பால்களோடும் இருக்கும்
நம்மால் எப்போதும் கதவுகளை திறக்க முடியாவிட்டாலும்
ஜன்னல்களையாவது திறந்து வைப்போம்

கருத்துகள் இல்லை: